Monday, September 28, 2009

சுசீந்திரம்



 
சுசீந்திரம் – கலையுடன் தழைக்கும் ஆன்மீகம்
நமது நாட்டின் ஆன்மீகப் பெருமையை பறைசாற்றுவதாகவும், தமிழ்நாட்டின் கலைப் பெருமைக்கு அத்தாட்சியாகவும் திகழும் திருத்தலம் சுசீந்திரத்திலுள்ள தாணுமாலயன் கோயிலாகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றங்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒன்றாக ஒருமித்து தாணுமாலயன் (தாணு= சிவன், மால்= திருமால், அயன்= பிரம்மா) என்ற திருநாமத்துடன் காட்சி தருகின்றனர்.

இத்திருத்தலத்தின் பெருமைக்குக் காரணமாக இருப்பது, பஞ்ச பாண்டவர்கள் தங்களின் வன வாசத்தின்போது இங்கு வந்து வணங்கியதும், அனுசூயாவின் கற்பை சோதிக்க வந்த மும்மூர்த்திகள், அவளுடைய கற்பின் மகிமையால் குழந்தைகள் ஆனதும், பிறகு மூவரும் இத்திருத்தலத்தின் கொன்றை மரத்தடியில் லிங்க வடிவத்தில் எழுந்தருளி காட்சியளிப்பதுமாகும்.

இந்தக் கொன்றை மரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று திருத்தலப் புராணம் கூறுகிறது.

webdunia photoWD
இத்திருக்கோயிலிற்குள் நுழைந்ததும் முதலில் வணங்கும் தெய்வமாய் காட்சியளிப்பவர் தட்சிணா மூர்த்தியாவார். இவரை வணங்கியப் பின் வசந்த மண்டபத்தையடைந்து அங்கு உமையுடன் வீற்றிருக்கும் சுசீந்தைப் பெருமானை தரிசிக்கலாம். இந்த வசந்த மண்டபத்தின் மேல் விதானத்தில் நவக்கிரங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளதைக் காணலாம். மேலே நவகிரங்கள் இருக்க கீழிருந்து வணங்கும் நிலையுள்ள ஒரே இடம் சுசீந்திரமே!

வசந்த மண்டபத்தை தாண்டி கோயிலின் பிரகாரத்திற்கு வந்ததும் நாம் தரிசிப்பது தனது தேவியுடன் அமர்ந்திருக்கும் விநாயகரே. அதன்பிறகு அந்த நீண்ட பிரகாரத்தில் நடக்கும்போது இரு புரங்களிலும் உள்ள தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் வியப்பூட்டுபவையாகும். 

இராமேஸ்வரம் கோயிலிற்குப் பிறகு மிக நீண்ட பிரகாரமாகத் திகழும் இக்கோயிலில் கருவறையைச் சுற்றி மூன்றுத் திசைகளிலும் அதனைத் தாங்கி நிற்கும் தூண்களின் சிற்பங்களை அறிவதற்கு நிச்சயம் வழிகாட்டியின் உதவி அவசியம். 

யாளிகள், விளக்கேந்தி நிற்கும் பாவைகள், சிருங்காரச் சிற்பங்கள் என்று நம் நெஞ்சைக் கவரும் கலைப் படைப்புகள்.

ஸ்ரீராமரை வணங்கி நிற்கும் ஹனுமான்

இப்பிரகாரத்தில் பிட்சாடனராய் நிற்கும் கங்காள நாதர் கோயிலும், பிரகாரத்திலிருந்து செல்லும் ஒரு தனி வழியில் மேலேறிச் சென்றால் பாறைகளால் மட்டுமே ஆன கயிலாய நாதர் கோயிலும் உள்ளது. 

இக்கயிலாய நாதர் கோயில் சுவற்றில் காணப்படும் கண்வெட்டுகள் அனைத்தும் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கிறது கோயில் விவரக் குறிப்பு. 

தெற்குப் பிரகாரத்தில் வில்வ மரமும், அதன் மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரையும், நாக வடிவங்களையும் வணங்கிய பின்னர், அய்யப்பனின் சன்னதியை காணலாம். சேர வாசல் சாஸ்தா என்றழைக்கப்படுகிறார். இப்பிரகாரத்தின் மறுகோடியில் ஸ்ரீராமர் - சீதை சன்னதிகள் உள்ளன. இச்சன்னதியின் சிறப்பு யாதெனில், பொதுவாக ஸ்ரீ இராமர், சீதை, இலக்குவன் மூவரும் நின்ற நிலையிலேயே அருள்பாலிப்பதைக் காணலாம். ஆனால் இங்குள்ள சன்னதியில் ஸ்ரீ இராமரும், சீதையும் அமர்ந்திருக்க, வெளியே இலக்குவனும், பிரகாரத்தின் நேர் எதிர் மூலையில் 18 அடி உயரமாக நெடுந்துயர்ந்து நிற்கிறார் ஹனுமான். 

No comments:

Post a Comment